“நேரு குடும்பத்தை அங்கீகரிப்பவர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம்!" – கேரள காங்கிரஸ் எம்.பி திட்டவட்டம்

காங்கிரஸ் கட்சி, தொடர்ச்சியாக இரண்டு மக்களவைத் தேர்தல்களில் தோல்வியடைந்ததையடுத்து மார்ச்சில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றயத் தேர்தலிலும் தோல்வியடைய, கட்சியின் தலைமை பொறுப்புக்குத் தேர்தல் நடத்தவேண்டும் என்று கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்தன. அதன்மீதான ஒரு நடவடிக்கையாகத்தான், வரும் அக்டோபர் 17 அன்று, காங்கிரஸின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டிருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கலும் வரும் 24-ம் தேதிமுதல் 30-ம் தேதிவரை நடைபெறுகிறது.

ராகுல் காந்தி -சசி தரூர்

இந்த அறிவிப்புகள் வெளியாகி பல நாள்கள் ஆனாலும்கூட, இதுவரை யார் யார் போட்டியிடப்போகிறார்கள் என எந்த தகவலும் வெளிவரவில்லை. இருப்பினும், ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டுமென்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறிவருகின்றனர். அத்தகைய தலைவர்களில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் ஒருவர். ஆனால், இதுபற்றி ராகுல் காந்தி வெளிப்படையாக எதையும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், இந்த தேர்தலில், காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் போன்றோர் போட்டியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் சோனியா காந்தியை நேற்று சசி தரூர் நேரில் சந்தித்தது அதே கேள்வியை எழுப்பியிருக்கிறது.

கே.முரளீதரன் காங்கிரஸ் எம்.பி

இந்த நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவரும், கேரளா எம்.பி-யுமான கே.முரளீதரன், தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். கேரளாவில் நடந்துவரும் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையின்போது செய்தியாளர்களிடையே பேசிய முரளீதரன், “ராகுல் காந்தி வந்து பதவியேற்க வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த சர்ச்சையும் இல்லை. ஆனால், பதவியை ஏற்பதா, வேண்டாமா என்பது அவரைப் பொறுத்தது. அதேசமயம், எப்படியும் நேரு குடும்பத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பவர்களுக்கு மட்டுமே நாங்கள் வாக்களிப்போம்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.