முல்லை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் கதி என்ன?.. 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி அருகே உள்ள முல்லை ஆற்றில் குளிக்க சென்ற வாலிபர் ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார். அவரை 2வது நாளாக தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் அசோக் (29). இவர் நேற்று மதியம் அனுமந்தன்பட்டி முல்லை ஆற்றுப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டார்.

அவரை, ஆற்று தண்ணீர் இழுத்து சென்றதை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அசோக்கை வெகுநேரமாக ஆற்றில் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இரவு நேரம் ஆனதால் தேடும்பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் அசோக்கை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.