10 நாட்களுக்கு முன் காணாமல்போன முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் – ஆற்றில் சடலமாக மீட்பு

ஓமலூர் அருகே செம்மண்கூடல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சரபங்கா ஆற்றில் சடலமாக மீட்கபட்டார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர் இன்று மாலை ஆற்றில் சடலமாக மிதந்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் செம்மண்கூடல் கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள எல்லாயூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் செம்மண்கூடல் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர். இவர் தேங்காய் நார் தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக குடும்பம் நடத்தி வருகின்றனர். முன்னாள் தலைவராக இருந்தாலும் கிராம மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12ஆம் தேதியில் இருந்து ஜெயராமனை காணவில்லை. அவரது மகன்களும், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
image
இதனைத் தொடர்ந்து நேற்று தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், எல்லாயூர் வழியாக செல்லும் சரபங்கா ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதந்துள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். பின்னர் நீச்சல் தெரிந்த ஆட்களை கொண்டு, ஆற்றில் மிதந்த ஆண் சடலம் மீட்கப்பட்டது. அப்போது, காணாமல்போன ஜெயராமன் தான் இறந்து சடலமாக மிதந்தது தெரிய வந்தது.
image
முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெயராமன் இறந்ததை உறுதி செய்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இறந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் தானாக ஆற்றில் விழுந்து இறந்தாரா அல்லது யாரவது அடித்து கொலை செய்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அவர் மது போதையில் தவறி விழுந்து இறந்தது தெரிய வந்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.