கேரளாவில் என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிராக முழு அடைப்பு: கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்..பயணிகள் அவதி..!!

கோவை: ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால் கோவையில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்றைய தினம் இந்தியா முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பல்வேறு சோதனை மேற்கொண்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கண்டித்து இன்று கேரளா மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

அந்த அடிப்படையில் பொது போக்குவரத்து இயங்காததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவுக்கு அருகே உள்ள மாவட்டமான கோவையில் இருந்து வழக்கமாக கேரளாவிற்கு 19 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கல்லூரி, வியாபாரம் என தினசரி ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இன்றைய தினம் கேரளாவில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று காலை கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா நோக்கி சென்ற அரசு பேருந்துகள் வாலையாறு எல்லையிலேயே நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக உக்கடத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால் கோவையில் இருந்து பணிக்காக கேரளா செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.