அதிகாரிகளுக்கு பாடம் நடத்திய இறையன்பு: வேளாண் துறையில் அடுத்து செய்ய வேண்டியது என்ன?

தமிழக விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மை – உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக, துறை அலுவலர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு தலைமைச் செயலகத்தில் காணொலி மூலம் எழுச்சி உரையாற்றினார்.

தமிழகத்தில் அதிகரித்துவரும் தரிசுநிலங்களை விளைநிலங்களாக மாற்றி, சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கவும், பல்வேறு வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் நவீனத் தொழில்நுட்பங்களை பின்பற்றி, மகசூலை அதிகரித்து, அதன் மூலம், தமிழக விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், உழவர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை உள்ளடக்கி, வேளாண்மைக்கென தனிநிதிநிலை அறிக்கையினை கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக தாக்கல் செய்து, நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பல்வேறு இடர்பாடுகள் நிறைந்த வேளாண்மைத் தொழிலில் விவசாயிகள் உயர்மகசூல் பெற்று, அவர்களின் விளைபொருட்களை இலாபகரமாக விலைக்கு விற்று வெற்றி பெறுவது என்பது மிகவும் சவாலாக மாறியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் உழவர் நலன் சார்ந்த பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, அனைத்துக் கிராமங்களுக்கும் சென்று, விவசாயிகளை சந்தித்து, அவர்கள் சாகுபடி செய்துவரும் பயிர்களை ஆய்விட்டு, அதற்கேற்றவாறு பரிந்துரைகளை வழங்குவதில் தமிழக வேளாண்மை – உழவர் நலத்துறை மிகவும் முக்கியமான பங்காற்றி வருகிறது.

இதற்காக அரசு சமீபத்தில் 361 வேளாண்மை அலுவலர்களையும், 162 தோட்டக்கலை அலுவலர்களையும், 27 தோட்டக்கலை உதவி இயக்குநர்களையும் புதியதாக பணியமர்த்தி உள்ளது. இவ்வாறு புதியதாக பணியமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பல்வேறு நிலைகளில் துறையின் செயல்பாடுகள் குறித்து, பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தாலும், அரசின் திட்டங்களை விவசாயிகளுக்குக் கொண்டு செல்வதில் துறை அலுவலர்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, விவசாயிகள் வளர்ச்சி எனும் ஒரே நோக்கத்தில் துறை அலுவலர்கள் முழுஈடுபாட்டுடன் பணியாற்றிட வேண்டும், உழவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தங்குதடையின்றி வழங்க வேண்டும் என்பதற்காக, 22.09.2022 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும், 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் காணொலி மூலம் சொற்பொழிவு ஆற்றினார்.

அந்த உரையில், மனித வாழ்வு மேம்படுவதற்கு வேளாண்மையின் முக்கியத்துவம், தொழில்நுட்பங்களின் மூலம் குறைந்த பரப்பில், அதிக மகசூல் எடுப்பதற்கான முயற்சிகள், ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதிசெய்யும் பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களின் சாகுபடிக்கு அதிக வாய்ப்பு இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் அளித்து, சாகுபடி பரப்பினை உயர்த்துதல்,

பண்ணைப் பணியாளர்களின் பற்றாக்குறையினை போக்குவதற்கு, வேளாண்மை இயந்திரமயமாக்குதலின் முக்கியத்துவம், ஒரே பயிரை அல்லது ஒரே இரகத்தை சாகுபடி செய்வதைத் தவிர்த்து, பல்வகை பயிர்களை சாகுபடி செய்ய ஊக்குவித்தல், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற கணினித் தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு காணுதல், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டியதன் அவசியம்,

கால்நடைகளை உள்ளடக்கி கலப்புப் பண்ணையத்தை விவசாயிகளிடையே பெருமளவில் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியம், வாய்ப்புள்ள நிலங்களில் இயற்கைப் பண்ணையத்தை மேற்கொண்டு, இயற்கை வேளாண்மை சாகுபடி மூலம் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களுக்கு சந்தை வசதியை ஏற்படுத்தித் தருதல் போன்ற புதிய உத்திகளை வேளாண்மைத் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் நன்கு தெரிந்து கொண்டு, விவசாயிகளிடையே எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு அறிவுரைகளை வழங்கிய அவர், பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு பல்வேறு பயிர்களையும், இரகங்களையும் உருவாக்க வேண்டும், பனை மரம் ஏறுவதற்கு இலகுவான இயந்திரங்களையும், குட்டை இரக பனை மர இரகங்களை உருவாக்க வேண்டும். உழவர்களுக்கு உரிய தொழில்நுட்பங்களை விரைவாக கொண்டுசெல்வதற்கு, பல்கலைக்கழகம், துறை, மற்றும் அரசுக்கு இடையே நெருங்கிய இணைப்பு இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் , அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் தன்னிறைவினை அடைவதற்கு துறை அலுவலர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக, வேளாண் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு அலுவலர்களும் தனக்குத் தானே கண்காணிப்பு அலுவலராகக் கருதி, தனது பணியினை ஆராய்ந்து, சிறப்புடன் செயலாற்ற வேண்டும்.

வேளாண் வல்லுநர் மட்டுமல்லாது, இளைய சமுதாயத்தினரின் எதிர்காலத்திற்காக மேடைப்பேச்சு மற்றும் புத்தகங்கள் வாயிலாக ஊக்கமளிப்பதில் நன்கு அனுபவம் வாய்ந்த அரசின் தலைமைச் செயலர் ஆற்றிய உரையின் மூலம் வேளாண்மை-உழவர் நலத்துறையில் உள்ள மனிதவளம் வலுவானதாக அமையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

இந்த கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலர் சி.சமயமூர்த்தி, மற்றும் துறைத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.