பெண் ஊழியர் கொலை: உத்தரகாண்ட் பாஜக பிரமுகர் மகனின் விடுதி நள்ளிரவில் இடிப்பு

ஹரித்வார்: தனது ஓய்வு விடுதியில் வரவேற்பாளராக வேலைபார்த்து வந்த 19 வயது இளம் பெண்ணை கொலை செய்தது தொடர்பாக, உத்தரகாண்ட் பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆரியா உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முதல்வரின் உத்தரவின் பேரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் புல்கிட் ஆர்யாவின் ஓய்வு விடுதி இடிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா பவுரி மாவட்டத்தில் ரிஷிகேஷ் அருகே வனாந்த்ரா என்ற ஓய்வு விடுதி ஒன்றை நடத்தி வந்தார். இந்த உணவு விடுதியில் அன்கிதா பண்டாரி என்ற 19 வயது பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த திங்கள் கிழமை அன்கிதா காணாமல் போனதாக புல்கித் ஆர்யாவும் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கால்வாய் ஒன்றில் இருந்து அன்கிதா பண்டாரியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி சமூகவலைதளங்களில் நேற்று வைரலானதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையை விரைவு படுத்தினர். விசாரணையில் அன்கிதாவின் கொலையில் அவர் வேலை பார்த்த விடுதியின் முதலாளியான புல்கித் ஆர்யாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக புல்கித் ஆர்யா, அவரது விடுதி ஊழியர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இதுதொடர்பாக மாநில காவல்துறைத் தலைவர் அசோக் குமார் கூறுகையில், “வனாந்த்ரா ஓய்வு விடுதி அமைந்திருக்கும் பகுதி வழக்கமான காவல் எல்லைகளின் கட்டுப்பாட்டில் வருவதில்லை. இந்தப் பகுதி முக்கிய நகரமான ரிஷிகேஷில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது போன்ற பகுதிகளில் நடக்கும் குற்றங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய ‘பத்வாரி’ (நிலவருவாய் அதிகாரி) அமைப்பு உள்ளது. அவர் காணாமல் போனவர் பற்றி வழக்கு பதிவு செய்தார். கொலையான பெண் காணாமல் போனதாக, ஓய்வு விடுதியின் முதலாளியான குற்றம்சாட்டப்பட்டவரே புகார் அளித்துள்ளார்.

மாவட்ட நீதிபதி இந்த வழக்கை வியாழக்கிழமை தான் எங்களிடம் மாற்றி உத்தரவிட்டார். இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். குற்றவாளியான ஓய்வு விடுதி உரிமையாளர் மேலும் இரண்டு நபர்களை கைது செய்துள்ளோம். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து புல்கித் ஆர்யாவிற்கு சொந்தமான வனாந்த்ரா ஓய்வு விடுதியை இடிக்க மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டார். மேலும் மாநிலத்தில் உள்ள மற்ற ஓய்வு விடுதிகளிலும் விசாரணை நடத்த மாவட்ட நீதிபதிகளை முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுமிகவும் துரதிர்ஷ்டமான சம்பவம், கொடுமையான குற்றம். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்தசம்பவம் குறித்து உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கரிமா மெஹரா தசவுனி, ” குற்றவாளிகள் பாஜக ஆர்எஸ்எஸ் தொடர்புடையவர்கள் என்பதால் போலீஸார் மந்தமாக செயல்படுகின்றனர். இது கொடூரமான செயல். இளம்பெண் செப்.18-ம் தேதி காணாமல் போயிருக்கிறார். ஆனால், எப்ஐஆர் 21ம் தேதிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ஆர்எஸ்எஸ் பாஜக தலைவர்களின் செயல் எவ்வளவு நாள் தொடரும்?” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கொலை குற்றத்தில் கைதாகியுள்ள புல்கித் ஆர்யாவின் தந்தை வினோத் ஆர்யா தற்போது மாநிலத்தில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். முன்னதாக மாநில அமைச்சராக இருந்த அவர் மண்பாண்ட வளர்ச்சிக்காக அமைப்பட்ட உத்தரகாண்ட் மாநில மட்டி கலா போர்டின் தலைவராக இருந்தார். புல்கித் ஆர்யாவின் சகோதரர் அன்கித் ஆர்யாவும் பாஜக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.