இந்திய அரசு முடக்கச் சொன்ன ட்வீட்களில் 50 – 60 சதவீதம் தீங்கற்றவை: ட்விட்டர் வாதம்

ஹைதராபாத்: இந்திய அரசு முடக்கச் சொன்ன ட்வீட்களில் 50 முதல் 60 சதவீதம் வரையிலான ட்வீட்கள் எந்தவித ஊறும் விளைவிக்காதவை என கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் தளத்தில் சில கணக்குகள், யூ.ஆர்.எல் மற்றும் ட்வீட்களை நீக்குமாறு இந்திய அரசு சார்பில் ட்விட்டர் நிறுவனத்திடம் முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுக்கு எதிராக ட்விட்டர் நிறுவனம் தொடுத்த மனுவை நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) விசாரித்தது. அப்போது இதனை ட்விட்டர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கருத்துப் பதிவுகள் மற்றும் சிலரது பக்கங்களை நீக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் சில உத்தரவுகளுக்கு எதிராக சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் சார்பில் கடந்த ஜூலை வாக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் பேரில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

ட்விட்டர் – மத்திய அரசு முரண்: ட்விட்டர் நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக அந்த தளத்தின் செயல்பாடு, அதில் பதிவு செய்யப்படும் பதிவுகள் போன்ற காரணங்களால் முரண்பாடு நீடித்து வருகிறது.

இந்நிலையில், பதிவுகளை நீக்கும் பொருட்டு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக, இந்த வழக்கை சில ஆதாரங்களுடன் ட்விட்டர் நிறுவனம் தாக்கல் செய்ததாக சொல்லப்படுகிறது. அரசு தரப்பில் ட்விட்டருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்ததே இந்த வழக்கு தொடுக்க அடிப்படைக் காரணம்.

2021-இல் 80-க்கும் மேற்பட்ட ட்வீட்கள் மற்றும் கணக்குகளை நீக்குமாறு மத்திய அரசு ட்விட்டரிடம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் இடையே முரண் ஏற்பட்டது. அரசு குறிப்பிட்ட ட்வீட் மற்றும் கணக்குகளில் சில விவசாய ஆர்வலர்கள், பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடங்கி இருந்தனர். இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2000-இன் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சகம் இந்தக் கோரிக்கையை வைத்தது. ஆனால், ட்விட்டர் கருத்து சுதந்திரத்தை மேற்கோள் காட்டி அதை செய்ய மறுத்தது. அங்கிருந்து இருதரப்புக்கும் இடையே முரண் உருவானது.

நீதிமன்றத்தில் வழக்கு: ட்விட்டர் தரப்புக்கு மத்திய அரசு நோட்டீஸ் அளித்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை ட்விட்டர் நாடியது. கடந்த 1-ம் தேதி அன்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 101 பக்க அறிக்கையில் ட்விட்டரின் மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ட்விட்டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் ததார், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வகுத்த விதிகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்றி வருவதாக தெரிவித்திருந்தார். மேலும், எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அரசு சொன்ன கணக்குகள், ட்வீட்கள் மற்றும் யூ.ஆர்.எல் -களை முடக்குவதால் நிறுவனம் எதிர்கொள்ளும் சிக்கலை அவர் மேற்கோள் காட்டியிருந்தார். அதனால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுவது குறித்தும் அவர் விளக்கி இருந்தார். அதோடு விதிகளுக்கு உட்படாத ட்வீட்களை முடக்குவதற்கு பதிலாக கணக்கை முடக்கும்படி அரசு சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.

வேளாண் மக்கள் போராட்டத்தின்போது செய்தி ஊடகங்கள் ஒளிபரப்பிய கருத்துகளை ட்விட்டர் தளத்தில் முடக்குமாறு அரசு சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். மற்றவர்கள் ஒளிபரப்பும்போது எங்களை மட்டும் முடக்க சொல்வது எந்த வகையில் நியாயம் எனவும் அவர் வாதாடினார்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சொன்ன ட்வீட்கள் மற்றும் கணக்குகள் அனைத்தும் விதிகளுக்கு புறம்பானவை எனவும் தெரிவித்துள்ளார். அதோடு அரசு முடக்க சொன்ன 1,178 கணக்குகளை உதாரணமாக சொல்லி வாதாடி உள்ளார். அதில் அரசு மற்றும் ட்விட்டர் தரப்பில் பயனர்களுக்கு எந்தவித நோட்டீஸும் இல்லாமல் கணக்குகளை முடக்க வேண்டும் என சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல தவறான கருப்பொருள் அடங்கிய ட்வீட்களை ட்விட்டர் நிறுவனம் தானாக முன்வந்து நீக்கிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு அரசு முடக்க சொன்ன ட்வீட்களில் 50 முதல் 60 சதவீதம் தீங்கற்றது மற்றும் ஊறு விளைவிக்காத வகையிலானது என அவர் ட்விட்டர் தரப்பில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 17-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.