ஐகோர்ட் பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்| Dinamalar

புதுடில்லி : சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட உத்தரவை மாற்றி, மீண்டும் பதிவேற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்கும்படி, நீதிமன்ற பதிவாளருக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.

நிதி பரிமாற்றம் தொடர்பான ஒரு வழக்கை சமீபத்தில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘ஸ்மைல் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம், 111 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையாக டிபாசிட் செய்ய வேண்டும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தொகையை திரும்பப் பெறக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முகமது நாசிர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:சென்னை உயர் நீதிமன்றம், செப்., 1ல் பிறப்பித்த மேற்கண்ட உத்தரவு, நீதிமன்றத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவில் மாற்றம், திருத்தங்கள் செய்யப்பட்டு, இணையதளத்தில் புதிய உத்தரவு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவின் சில வாசகங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்ட உத்தரவு, மாற்றம் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்ட உத்தரவு என, இரண்டின் நகல்களும் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் கே.சுப்ரமணியன், ‘என் 50 ஆண்டு கால வழக்கறிஞர் அனுபவத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வை பார்த்தது இல்லை’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு மாற்றப்பட்டு, அதில் உள்ள வாசகங்கள் நீக்கப்பட்டு, வேறு உத்தரவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டியுள்ளது.எனவே உயர் நீதிமன்ற பதிவாளர், எந்தவிதமான சூழ்நிலையில் இதுபோல் நடந்தது என்பது தொடர்பாக சீலிடப்பட்ட உரையில் வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இது தொடர்பாக பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.