சமயபுரம்: அரைஞாண் கயிற்றில் தூக்கு; போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக் கைதி தற்கொலை!

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று காலை பக்தர்களிடம் செல்போன் திருடியதாக, 37 வயதான நபர் ஒருவரை கோயில் பாதுகாப்புப் பணியிலிருந்த ஊழியர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். விசாரணையில் அந்த நபர் அரியலூர் மாவட்டம், ஓரியூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து முருகானந்தத்தை ஸ்டேஷனில் உள்ள கைதிகள் அறையில் அடைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், கழிப்பறைக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு சென்ற முருகானந்தம், கழிப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.

தன்னுடைய அரைஞாண் கயிற்றின் மூலம், கழிப்பறையின் பக்கவாட்டு ஜன்னலில் முருகானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது. செல்போன் திருடியதாக ஸ்டேஷனுக்கு அழைத்துவரப்பட்ட முருகானந்தத்திடமிருந்து எந்தப் பொருளும் கைப்பற்றப்பட்டவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதுபோக காலை 7 மணிக்கு விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துவரப்பட்ட முருகானந்தம்மீது, அவர் தற்கொலை செய்துகொள்ளும் வரை எந்த வழக்கும் பதிவுசெய்யப்படவில்லை என்கின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட ஸ்டேஷனின் தனிப்பிரிவு காவலர்தான் முருகானந்தத்தை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்ததாகச் சொல்கின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட விசாரணைக் கைதி முருகானந்தம்

போலீஸ் ஸ்டேஷனிலேயே விசாரணைக் கைதி உயிரிழந்ததையடுத்து, திருச்சி எஸ்.பி சுஜித் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சமயபுரம் காவல் நிலையத்தில் முருகன் என்ற விசாரணைக் கைதியை போலீஸார் அடித்துக் கொன்றதாக வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படியிருக்க, தற்போது ஸ்டேஷனிலேயே விசாரணைக் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.