வக்கீல் போன்று மாறுவேடத்தில் ஆஜரான நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமின்: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வக்கீல் போன்று மாறுவேடத்தில் ஆஜரான நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பெங்களூருவைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் மூலம் பலவகைகளில் ஆதாயம் அடைந்ததாக கூறியுள்ளது.

இந்த பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் கடந்த 14ம் தேதி விசாரணைக்காக டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை முன் ஆஜரானார். இந்நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடுத்த முன்ஜாமின் மனு, இன்று டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், வழக்கறிஞர்களை போன்று வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்தவாறு மாறுவேடத்தில் நீதிமன்றத்தில் ஆஜரானதாக கூறப்படுகிறது.

இவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ரூ.50,000 பிணை தொகையை செலுத்தி ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதால் தற்போதைக்கு கைது நடவடிக்கையில் இருந்து ஜாக்குலின் பெர்னாண்டஸ் தப்பியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.