விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

விக்கிரவாண்டி – தஞ்சாவூர் இடையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பாமகவை சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையிலான 168 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், இதில் விக்கிரவாண்டி – பண்ருட்டி – நெய்வேலி – வடலூர் – மீன்சூரிட்டி – கும்பகோணம் வரையிலான சுமார் 60 கிலோ மீட்டர் வரை சாலை பணிகள் மந்த கதியில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக விக்கிரவாண்டி – பின்னலூர் இடையிலான பணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக சென்னையிலிருந்து கடலூர், தஞ்சாவூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவதாகவும் மாற்றுப்பாதையில் செல்வதால் நேரம் மற்றும் பணம் விரயமாவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே விக்கிரவாண்டி- தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டுமெனவும், இந்த பணிகள் முடிவடையும் வரை இந்த சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனு குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை செயலாளர், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.