போரில் கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை இணைக்கிறது ரஷியா -நாளை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுகிறார் புதின்

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 7 மாதங்களாக ரஷியா போர் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. மேலும் பல நகரங்களை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.

இந்த நிலையில் உக்ரைனில் ரஷிய படைகள் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள ரஷியா முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்த 4 பிராந்தியங்களை சேர்ந்த மக்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள ரஷியா அங்கு பொதுவாக்கெடுப்பை நடத்தியது. கடந்த 23-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை இந்த வாக்கெடுப்பு நடந்தது. ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள் வெளியாகும் என்று மேற்கத்திய நாடுகள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன.

அதன்படியே இந்த பொதுவாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. 4 பிராந்தியங்களிலும் பெரும்பாலான மக்கள் ரஷியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் ஜாபோர்ஜியா பிராந்தியத்தில் 93 சதவீதம் பேரும், கெர்சன் பிராந்தியத்தில் 87 சதவீதம் பேரும், லுஹான்ஸ்க் மற்றும் டொனட்ஸ்க் பிராந்தியங்களில் முறையே 99 மற்றும் 98 சதவீதம் பேரும் ரஷியாவுடன் இணைய ஆதரவு தெரிவித்துள்ளதாக ரஷியா கூறுகிறது.

இதைதொடர்ந்து உக்ரைனின் இந்த 4 பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அதிபர் புதின் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.