அவரை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது – மீனாவின் வைரல் பதிவு

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் படமாகியுள்ளது. எம்ஜிஆர், கமல் ஹாசன் உள்ளிட்டோரால் சாத்தியப்படாத விஷயத்தை மணிரத்னம் சாத்தியமாகியிருக்கிறார். 70 ஆண்டுகளாக தமிழர்களின் மனக்கண்ணில் விரிந்த கதாபாத்திரங்கள் இன்று முதல் திரையில் அனைவருடைய கண்களின் முன் உலாவ ஆரம்பித்திருக்கின்றன. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கிடையே பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்போடு சென்ற ரசிகர்களுக்கு தன் நடிப்பின் மூலம் மிகப்பெரிய விருந்து படைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய். சூழ்ச்சி, வஞ்சம், வன்மம், சோழப்பேரரசை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற பிடிவாதம் என அத்தனை தீய குணங்களையும் உள்ளடக்கி நந்தினி கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பார் எழுத்தாளர் கல்கி.

அவர் எப்படி நந்தினியை உருவகப்படுத்தியிருந்தாரோ அப்படியே மணிரத்னமும் காட்சிப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக, நந்தினியை ஐஸ்வர்யா ராய் அப்படியே கண் முன் நிறுத்தியிருப்பதாக் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் கதையின் தீவிர ரசிகையும், நடிகையுமான மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனிமேலும் என்னால் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. இது என்னை திணறடிக்கிறது; மனதை விட்டு சொல்லியே ஆக வேண்டும். எனக்குப் பொறாமையாக உள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)

பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீது வாழ்க்கையில் முதல்முறையாக நான் பொறாமை கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார். தற்போது மீனாவின் இந்தப் பதிவு வைரலாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.