சென்னையில் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல்!!

சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கட்டிட மற்றும் நில உரிமையாளர்களிடம் சொத்து வரியும் தொழில் மற்றும் வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களில் தொழில் வரியும், தொழில் உரிமம் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. அந்த அரையாண்டில் மட்டும் ரூ.945 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் வருவாயை உயர்த்தவும், நீண்டகால நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க வேண்டும் என மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் நிலுவை வரி மற்றும் நடப்பாண்டு வரியை வசூலிக்க அதிகாரிகள் தீவிரம் காண்பித்தனர்.

உரிய நேரத்தில் வரியை செலுத்துபவர்களுக்கு சலுகைகளையும் மாநகராட்சி அளித்தது. இதன் காரணமாக கடந்த நிதியாண்டின் மொத்த வரி வருவாய்க்கு நிகராக நடப்பாண்டின் முதல் அரையாண்டிலேயே வரி வசூல் ஆகியுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த 2021-2022 நிதியாண்டில் மொத்தமே ரூ. 1,240 கோடி வரி வசூலாகியிருந்தது. ஆனால் தற்போது முதல் அரையாண்டில் மட்டும் ரூ. 945 கோடி வசூலாகியுள்ளது என தெரிவித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டில் மொத்தம் ரூ. 1700 கோடி வரி வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மாநகராட்சியின் வருவாயை மேலும் அதிகரிக்க பெரு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் பள்ளிக்கூடங்கள் , கல்லூரிகள், தொழிற்சாலைகள் , நட்சத்திர விடுதிகள் குடியிருப்புகளின் அளவுகளை மறு மதிப்பீடு செய்து அதற்கேற்ப வரி தொகையை வரிவசூலிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் வரிகளையும், நிலுவையில் உள்ள வரிகளையும் விரைந்து செலுத்த பொதுமக்கள் தாமாகவே முன்வர வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.