வேலூரில் பறந்தது 500 ரூபாய் நோட்டுகள்.. போட்டி போட்டு பொறுக்கியதால் பரபரப்பு..!

வேலூர் மாவட்டம், கொணவட்டம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகே இன்று காலை காரில் வந்த கும்பல் ஒன்று கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை கொட்டிவிட்டு சென்றனர்.

காற்றில் பிரிந்த ரூபாய் நோட்டுகள் சாலையில் பறந்தன. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை போட்டி போட்டு எடுத்தனர். அதில் ஒருவர் இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு சிதறிக் கிடந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்தனர். மேலும் பொதுமக்கள் எடுத்து வைத்திருந்த ரூபாய் நோட்டுகளையும் வாங்கினர். அதனை காவல் நிலையம் கொண்டு சென்று எண்ணிய போது, 14.50 லட்சம் ரூபாய் இருந்தது.

ரூபாய் நோட்டுகளை சோதனை செய்தபோது, அது கலர் ஜெராக்ஸ் எடுத்த கள்ள நோட்டுகள் என தெரியவந்தது. கள்ள நோட்டுகளை வீசிச் சென்ற கும்பல் யார் என்பதை அறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இன்று காலையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

காற்றில் பறந்த ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் சிலர் எடுத்துச் சென்றனர். அவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வியாபாரிகள் 500 ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.