வாஷிங்டன் :அமெரிக்காவில் மரபணு குறைபாடு காரணமாக இரண்டு முகங்களுடன் பிறந்து, நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருக்க மாட்டார் என டாக்டர்களால் கூறப்பட்டவர், நேற்று தன் 18வது பிறந்த நாளை கொண்டாடினார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்தவர் பிராண்டி. இவரது மகன் ஜான்சன். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், இவர் பிறந்தபோது, டாக்டர்களும், பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஜான்சனுக்கு இரண்டு முகங்கள் இருந்தன; அவை ஒழுங்கற்று இருந்தன. ஒரு மண்டை ஓடு, இரண்டு நாசி, பிளவுபட்ட வாய் போன்ற வித்தியாசமான முக வடிவத்துடன் பிறந்த ஜான்சன், ‘சோனிக் தி ஹெட்ஜ்ஹாக்’ என்ற, ஒருவிதமான மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், ஒரு நாளைக்கு குறைந்தது, 30 முறைக்கு மேல் இவருக்கு வலிப்பு வரும் என்றும் தெரிவித்த டாக்டர்கள், நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தனர்.ஆனாலும், தொடர் மருத்துவ சிகிச்சை, சிறிய அளவிலான உடற்பயிற்சிகள், குறிப்பிட்ட சில மூலிகை எண்ணெய் வகைகளை வைத்து மசாஜ் செய்வது ஆகியவற்றின் காரணமாக, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஜான்சன், நேற்று தன், 18வது பிறந்த நாளை பெற்றோருடன் கொண்டாடினார். இது குறித்து ஜான்சனின் தாய் பிராண்டி கூறியதாவது:ஜான்சன் பிறந்த போது அவனது முகத்தை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து விட்டேன்.அவன் நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருக்க மாட்டான் என, அடுத்த அதிர்ச்சி செய்தியை டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால், டாக்டர்களின் தொடர் சிகிச்சை, மூலிகை எண்ணெய் ஆகியவற்றின் காரணமாக ஜான்சன் உயிருடன் இருக்கிறான். குழந்தைக்கான மன நிலையே அவனிடம் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், அவன் உடல் நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement