புதுப்பொலிவு பெறும் பழமையான உதகை நகராட்சி மார்க்கெட்: ரூ.29 கோடியில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பிவைப்பு

உதகை நகராட்சி மார்க்கெட் ரூ.29 கோடியில் புதுப்பிக்கப்படுவதுடன், கடைகளுக்கு மேல் தளத்தில் வாகன நிறுத்துமிடமும் கட்டப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியின் மையப் பகுதியில் தினசரி சந்தை உள்ளது. இந்தமார்க்கெட்டில் 1,450-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுகின்றன.

நாட்டின் மாடல் சந்தையாகவும் கருதப்படுகிறது. இங்கு காய்கறி, மீன் கடை, பழக்கடை, பூக்கடை என தனித் தனிப் பிரிவுகளாக செயல்படுகின்றன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள்தங்கள் விளைபொருட்களை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதனால், எப்போதுமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்.

நூற்றாண்டு பழமையான இந்த மார்க்கெட்டில் உள்ள கட்டிடங்கள் பழுதடைந்துள்ளன. மேலும், வசதிகளும் குறைவாகஉள்ளதால், சந்தையை புதுப்பிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ரூ.29 கோடியில் வாகன நிறுத்துமிடத்துடன் கடைகள் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கட்டிடப் பணிகள் மேற்கொள்வதற்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மார்க்கெட் பகுதியில் சில இடங்களில் மண் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி, பல்வேறு சோதனைக்கு உட்படுத்துவதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மண் எவ்வளவு எடை தாங்குகிறது என்பதை அழுத்தம் கொடுத்து சோதித்து வருகின்றனர். மேலும், கட்டிடத்தின் அடித் தளத்தை ஆழப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டு, எவ்வளவு ஆழத்துக்கு துளையிடுவது என்பதை பொருத்து, கட்டிட பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜ் கூறும்போது, “உதகை நகராட்சி தினசரி சந்தைக்‌ கட்டிடம்‌, ஆங்கிலேயர்‌ காலத்தில்‌ கட்டப்பட்டது. பெரும்பாலான கடைகளின்‌ மேற்கூரைகள்‌ தகரத்தினால் வேயப்பட்டுள்ளன.

மிகவும் பழுதடைந்துள்ள மீன்‌ கடை முதல்‌ காய்கறி கடைகள்‌ வரை 190 கடைகளை முழுவதுமாக இடித்துவிட்டு, புதிதாக நவீன‌ வசதியுடன்‌ கூடிய 231 கடைகள், 2பொதுக்‌ கழிவறைகள், ஏடிஎம்மையம், உணவகம், காத்திருப்புஅறை ஆகியவை கட்டப்பட்டவுள்ளன.

இந்த கடைகளின் மேல் தளத்தில் 137 நான்கு சக்கர வாகனங்கள், 200 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும்வகையில் வாகன நிறுத்துமிடமும் கட்டப்படும். இதற்கு ரூ.29 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை அறிவிப்பு மானிய கோரிக்கை எண்‌ 34-ல்‌, தமிழகத்திலுள்ள நகராட்சிகளுக்கு சொந்தமான 13 தினசரி சந்தைகளை மேம்படுத்த ஏதுவாக ரூ.4,120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, புதிதாக கடைகள்‌ கட்டுவதற்கு கலைஞர்‌ நகர்ப்புற மேம்பாட்டு திட்டம்‌ 2022-2023 நிதியிலிருந்து வழங்கக்‌ கோரி, நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்படவுள்ளது’ என்றார்.

வியாபாரிகள் கூறும்போது, “புதிதாக கட்டப்படும் கடைகளை, தங்களுக்கே வழங்க வேண்டும். மேலும், கட்டிடம் கட்டி முடிக்கப்படும் வரை தற்காலிக கடைகள் அமைத்து தர வேண்டும்” என்றனர்.

பொதுமக்கள் கூறும்போது, “மார்க்கெட்டில் வாகன நிறுத்துமிடம் கட்டப்படுவதால், நகரின் பார்க்கிங் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.