பசை வடிவில், மெத்தையில், கட்டிங் பிளேயரில் மறைத்து எடுத்து வந்த 1.25 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து கொண்டு வந்த 1000 கிராம் எடையுள்ள பசை வடிவிலான பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் அதை பிரித்து எடுத்ததில் 907 கிராம் சுத்த தங்கம் கிடைத்தது. இதன் மதிப்பு ரூ.47,54,494 ஆகும். அதேபோல் அதே விமானத்தில் பயணித்த மற்றொரு ஆண் பயணி கொண்டு வந்த மெத்தை விரிப்பை சோதனை செய்ததில், அதில் தங்கத்தை மஞ்சள் நிற வர்ணம் தௌித்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.4,79,160 மதிப்புள்ள 99 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதே விமானத்தில் வந்த மற்றொரு ஆண் பயணி கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்ததில் அவர் கொண்டு வந்த கட்டிங் பிளேயர் மற்றும் 3 பின் சுவிட்ச் சாக்கெட்டில் உருளை வடிவிலான தங்க துண்டுகளை மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருட்களை பறிமுதல் செய்து பிரித்து எடுத்ததில் சிறிய உருளை வடிவில் 2 தங்க துண்டுகள், பெரிய உருளை வடிவில் 2 தங்க துண்டுகள், மிகச்சிறிய அளவிலான தங்க துண்டுகள் என மொத்தம் 178 கிராம் தங்கம் கிடைத்துள்ளது. இதன் மதிப்பு ரூ.9,33,076 ஆகும். 3 பயணிகளிடமும் தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.