ஜெயலலிதா உயிரோடிருந்த வரை பாஜகவை, மத்திய அரசை வந்து பார் என தனது செயல்பாடுகளால் மிரட்டி வந்தார். அவர் மறைந்த பின்னர் நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. அதிமுகவில் நடக்கும் ஒவ்வ்வொரு சின்ன அசைவும் டெல்லியின் வழிகாட்டுதலின் பேரிலேயே எடுக்கப்பட்டது.
துக்ளக் குருமூர்த்தி இதை வெளிப்படையாகவே இதற்கு முன்னர் பேசினார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தற்காலிகமாக ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றாலும்,
கட்சியும், ஆட்சியும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என எண்ணிணார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் பணிகள் நடைபெற்றன. கட்சியின் உச்ச பதவியை தற்காலிகமாக பெற்றார். ஆனால் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க ஓபிஎஸ் அப்போது தயாராக இல்லை.
ஓபிஎஸ் தயாராக இல்லை என்பதை விட அவர் பின்னால் அப்போது டெல்லி நின்றதாலும், சசிகலாவின் கைகளில் அதிகாரம் முழுவதும் செல்வது டெல்லிக்கு பிடிக்கவில்லை என்பதாலும் அதிரடி காட்சிகள் அடுத்தடுத்து நடந்தேறின. ஓபிஎஸ் தர்மயுத்தம், சசிகலா சிறைவாசம், எடப்பாடி கைக்கு சென்ற முதல்வர் பதவி என எதிர்பாராத சம்பவங்கள் நடந்தன.
தான் சொல்லி தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் இருந்தார் என்று டெல்லியில் செல்வாக்கு மிக்க துக்ளக் குருமூர்த்தி ஏற்கெனவே கூறியிருந்தார். ஓபிஎஸ் வசம் அப்போதும் சொற்ப அளவிலான சட்டமன்ற உறுப்பினர்களே இருந்த போதும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி, துணை முதல்வர் பதவி கிடைத்தது.
அதேபோல் இப்போதும் அவரை சேர்த்து மூன்று சட்டமன்ற உறுப்பினர்களே அவர் வசம் இருக்கின்றனர். இருப்பினும் இந்த முறையும் டெல்லியின் பார்வையை தன் மீது திருப்பிக்கொண்டார். 2017 நிலைமை இப்போது தலைகீழாக உள்ளது. சசிகலா வேண்டாம் என டெல்லி அப்போது நினைத்தது. ஆனால் இப்போது அனைவரும் இணைந்த அதிமுக தான் வேண்டும் என டெல்லி கணக்கு போடுகிறது.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 25 இடங்களில் வெல்ல வேண்டும் என கணக்கு போடுகிறது. அதற்கு பிரிந்து நின்றால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பாஜக கூட்டணி தவறவிடும் இடங்களை திமுக – காங்கிரஸ் கூட்டணி தட்டிச் செல்லும். அது தனக்கு எதிராக திரும்பும் என பாஜக நினைக்கிறது.
பாஜக அதிமுகவை பிளவு படுத்தாது. ஆனால் அதிமுக பிளவால் பாஜக வளர்ச்சி பெறும். பொதுமக்கள் ஒத்துழைப்புடன் இருக்கும். அதிமுக தொடர்ந்து இதே போல் இருந்தால் அது சின்ன கட்சியாக மாறிவிடும். அதிமுகவின் அடையாளமாக எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இருந்தால் அதிமுக சின்னக்கட்சி ஆக மாறிவிடும் என்று குருமூர்த்தி சொன்னதை இதோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.
அதிமுக பலவீனமடைந்தால் இனி வரும் காலங்களில் அதன் ஆதரவாளர்கள் பாஜக பக்கம் நகரக்கூடும். ஆனால் அது உடனடியாக நடந்துவிடாது. தற்போதைக்கு மக்களவைத் தேர்தல் வெற்றி முக்கியம் . எனவே அதிமுக சசிகலா -ஓபிஎஸ் – எடப்பாடி என மூவரும் இணைந்து வலிமை பெற வேண்டும் என்பதையே டெல்லி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
100 சதவீதம் ஓபிஎஸ்ஸுக்கு இடமில்லை என்று தொடர்ந்து கூறிவரும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இணைப்பை சாத்தியப்படுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.