புதுடெல்லி: கர்நாடகாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இம்மாநில உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவு செல்லும் என கடந்த மார்ச்சில் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், இஸ்லாமிய மாணவிகள் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, துலியா உள்ளிட்டோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது. இதில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை கடந்த மாதம் 22ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், நீதிபதி ஹேமந்த் குப்தா நாளை ஓய்வு பெறுவதால், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.