நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, சட்டத்தை மீறி வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், மத்திய மற்றும் மாநில சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், “மத்திய மற்றும் மாநில அரசுகள் வாடகைத் தாய் ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டு வந்துள்ளது. கர்ப்பப்பையில் பிரச்சனை, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விதிகளின் படி, வாடகை தாய் தேவை என்று மருத்துவ சான்றிதழை மாவட்ட மருத்துவ வாரியத்திடமிருந்து பெற வேண்டும்.
ஆனால், இதில் எந்த விதிகளையும் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பின்பற்றவில்லை. மேலும், அரசு விதிமுறைகளை மீறி திருமணமாகி ஓராண்டு நிறைவடையாமல் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி மீது மத்திய மற்றும் மாநில வாடகைத் தாய் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, இளைஞர்கள் மற்றும் சமூகத்தினருக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கிறது.
சட்டவிரோதமாக வாடகைத் தாய் முறையை ஊக்குவிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி, வாடகைத் தாய் மற்றும் வாடகைத் தாய் சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் ஆகியோரை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.