சென்னையில் செயல்பட்டுவரும் ‘டைக்கி’ என்ற கட்டணம் செலுத்த உதவும் (Payment Aggregator) ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் அங்கீகரிக்கப்பட்ட உரிமம் தந்திருக்கிறது.
சென்னையைச் சார்ந்த ‘பேசிஸ்பே’ என்ற தொழில் நிறுவனத்தின்கீழ் உள்ள ‘டைக்கி சொலுஷன்ஸ் (பி) லிட்’ செப்டம்பர் 22 முதல் ‘கட்டணம் திரட்டுவோராக பணிபுரியும்’ அங்கீகாரத்தை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
இது பற்றிப் பேசிய டைக்கி நிறுவனத்தின் இணை நிறுவனர் சரவணன் சந்திரசேகரன், “இது ‘டைக்கி’க்கு கிடைத்துள்ள மிக நல்ல செய்தியாகும். மேலும், செப்டம்பர் 22 -ல் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள எங்களுக்குப் புதிய தொடக்கம் எனலாம்.
‘பேமென்ட் அக்ரிகேட்டர்’ என்பது நுகர்வோர் மற்றும் வர்த்தகர்களின் இணையவழி பணப் பரிவர்த்தனைக்குப் பொறுப்பேற்று நிர்வகிக்கும் மூன்றாம் தரப்பு அமைப்பாகும். இந்த உரிமத்தைப் பெற்றதால், நாட்டின் இணையவழி பரிவர்த்தனைச் சந்தையில் தரம் உயர்ந்த பணிகளைச் செய்ய வழி கிடைத்திருக்கிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட பரிவர்த்தனை சேவைகள் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளோம். நேர்மையான சேவை என்ற குறிக்கோளில் ‘டைக்கி’ உறுதியுடன் உள்ளது. ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி பல நிபந்தனைகளை விதித்திருந்த போதிலும் முன்னணி நிறுவனங்களுக்கு மத்தியில் நாங்கள் ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்றுள்ளோம். Payment Gateway மட்டுமன்றி, பலவகை பணிகளையும் செய்கிறோம்.
இணையவழிப் பணப்பரிமாற்றம், பிரீபெய்டு கார்டு, டெபிட் கார்டு, தனியாருக்கான கிரெடிட் கார்டு, விற்பனை இணைய சேவை, தானியங்கி பணம் பெறும் சேவை, சில்லறை வர்த்தகம், இணையவழிச் சேவைகள், பிபிஎஸ் என எண்ணற்ற பணிகளை ‘டைக்கி’ செய்கிறது. முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் எங்கள் குழுதான் இதற்கு காரணம். கடின உழைப்பு, ஒளிவுமறைவற்ற வர்த்தகம், நேர்மை, வாடிக்கையாளர் சேவை ஆகியவைதான் எங்கள் நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள்” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.