இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 9-வது ஆண்டாக ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ராணுவ தளங்களுக்கும் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். அதன் அடிப்படையில், இந்த தீபாவளிக்கு கார்கில் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது மேஜர் அமித் என்ற ராணுவ வீரர் பிரதமருக்கு வழங்கிய நினைவு பரிசு பிரதமர் மோடியை நெகிழவைத்தது. இது தொடர்பாக வெளியான தகவலில், “2001-ம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, குஜராத் மாநிலம் பலாச்சடியில் உள்ள சைனிக் ராணுவ பயிற்சி பள்ளிக்கு விருந்தினராக சென்றிருக்கிறார்.
அப்போது, அங்கு பயிற்சி வகுப்பில் விருது வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பள்ளியில் அப்போது படித்து வந்த அமித்-க்கு அப்போதைய முதல்வர், இப்போதைய பிரதமர் மோடி விருது வழங்கியிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை, பிரதமரை சந்தித்த போது அமித் வழங்கியிருக்கிறார். இந்த புகைப்படத்தைப் பார்த்த பிரதமர் நெகிழ்ந்து வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அமித், “அந்தப் புகைப்படத்தை பிரதமருக்கு வழங்கியது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 21 வருடத்துக்கு பிறகு மீண்டும் பிரமரை சந்தது மகிழ்ச்சி” எனத் தெரிவித்திருக்கிறார். தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
மேலும் கார்கில் பகுதியில் பணியில் இருந்த தமிழக ராணுவ வீரர்கள் உற்சாகமாக பாட்டுப்பாட, மோடி அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.