பிரேத பரிசோதனை விசாரணைகள் தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு (2021) முழு காலப்பகுதியில் 521 கொலைகள் பதிவாகியுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரேத பரிசோதனை விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரேத பரிசோதனைகளை நடத்துவது தொடர்பாக தற்போதுள்ள விதிகள், நடைமுறைகள் மற்றும் பயன்பாடுகளில் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்வதற்காக பரிந்துரைகளை வழங்குவதற்கு பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்துள்ளதாக உரிய அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது