புதுடில்லி, அடுத்த வாரம் இந்தியா நீண்ட துார ஏவுகணை சோதனை நடத்தப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இதை கண்காணிக்கும் நோக்கத்தில், இந்திய பெருங்கடல் பகுதிக்குள் ஒரு உளவு கப்பலை சீனா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, அண்டை நாடான சீனாவின், ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பல், இன்னொரு அண்டை நாடான இலங்கை துறைமுகத்தில் முகாமிட்டிருந்தது. சில நாட்கள் அங்கிருந்த அந்தக் கப்பல் பின்னர் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவிலிருந்து, வரும் 10 – 11ம் தேதிகளில் நீண்ட துாரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தப் போவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்த ஏவுகணை, 2,200 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடியது. இதையடுத்து, இந்த தொலைவில் உள்ள வான் பகுதிக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு சொந்தமான ‘யுவான் வாங் 6’ என்ற உளவு கப்பல் இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளதாகவும், அடுத்த சில நாட்களுக்கு பாலி கடற்பகுதியில் அந்த கப்பல் முகாமிடப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த உளவு கப்பலில், ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் வகையிலான நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன.
சீனக் கப்பல் இந்திய பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளதை, கப்பல்களின் போக்குவரத்தை கண்காணிக்கும் சர்வதேச நிறுவனமான, ‘மரைன் டிராபிக்’ உறுதி செய்துள்ளது.
இது குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது:
ஏவுகணையின் செயல் திறன், அதன் தொழில்நுட்பம், துல்லியம், வேகம் ஆகியவற்றை சீன உளவு கப்பலால் எளிதாக கண்காணிக்க முடியும். சீனாவின் இந்த அத்துமீறல், மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்