தமிழக கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் முறையிட திமுக திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான மனுவில் திமுக மற்றும் அதனுடன் ஒருமித்த கருத்துகள் கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட வேண்டும் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுகவின் கூட்டணிக் கட்சி எம்பிக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், தமிழக கவர்னரை திரும்பப்பெற வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்புவதால் எந்த பயனும் இல்லை என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; “கவர்னருக்கு அவரது கருத்தை கூற உரிமை உள்ளது. அவரது கருத்து உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஆனால், அவர் கூறிய ஒரு கருத்துக்காக அவரை திரும்பப் பெற வேண்டும் என கூறுவது தவறு என்பது எனது கருத்து.
நாட்டில், யார் வேண்டுமானலும் கருத்து சொல்லலாம். கருத்து சொல்லும் உரிமை சாதாரண குடிமகனுக்கும் உள்ளது, நாட்டின் முதல் குடிமகனுக்கும் உள்ளது. கவர்னர் அவரது கருத்தை கூறியுள்ளார். இதற்காக அவரை திரும்பப் பெற வேண்டும் கூறுவது தேவையில்லாதது. அதற்காக கையெழுத்து போட்டாலும் எதுவும் நடக்கப்போவதில்லை” என்று கூறினார்.