திராவிட மாடல் மட்டும் இல்லையென்றால்…. பொன்முடி பேச்சு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று விழுப்புரத்தில் நடைபெற்றது. 
அதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “புதிய கல்விக்கொள்கையில் மூன்றாம் வகுப்பிகும், 5ஆம் வகுப்பிலும், 8ஆம் வகுப்பிலும் பொதுத்தேர்வு என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆரம்பத்திலேயே வடிகட்டினால் நிறைய பேரின் கல்வி பாதிக்கப்படும் என்பதால்தான் புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கிறோம். பொறியியல் பயில்பவர்கள் கண்டிப்பாக தமிழ் படிக்க வேண்டும் என்பதால் வருகின்ற ஆண்டில் இருந்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கட்டாயம் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படித்தால் மட்டும் போதாது. படிக்கும்போதே தனி திறமையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்தத் துறையில் பயின்றாலும் அந்தத் துறையில் நான் முதல்வனாக வர வேண்டும் என்ற எண்ணம் வளர வேண்டும். அதற்காகத்தான் நான் முதல்வன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி 2010-ல் ஆட்சியில் இருக்கும் போதே பொறியியல் படிப்பில் சிவில் படிப்பு தமிழ் வழியில் கொண்டு வரப்பட்டது. எங்களுக்கு ஆங்கிலமும், தமிழும் என இரு மொழிக்கொள்கை முக்கியம். வெளிநாடுகளுக்குச் சென்று பணி செய்ய வேண்டும் என்றால் ஆங்கிலம் முக்கியமாக உள்ளது. அதற்காக ஆங்கிலத்தை மட்டும்  கற்றுக்கொண்டால் போதும் என நினைக்காமல் தாய்மொழியான தமிழையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சி இல்லை என்றால் எப்பொழுதே தமிழை அழித்து இருப்பார்கள். இந்தியை புகுத்திப் படிக்கச் சொன்னால் எப்படி முடியும். திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆங்கிலம், தமிழ் வழி என இரு மொழிக் கல்விதான். பன்னாட்டு மொழியான ஆங்கிலம் இருக்கும் போது எதற்காக இந்தி?

இருமொழிக் கொள்கையைக் கொண்டு வந்து தமிழ் மொழியை உயர்த்தி இருக்கிறோம். நாங்கள் இந்திக்கு எதிர்ப்பானவர்கள் அல்ல. ஆனால் இந்தி கட்டாயப் பாடம் என்றால் அதனை ஏற்க மாட்டோம். கற்றுக்கொள்ள விருப்பப்படுபவர்கள் இந்தியைக் கற்றுக் கொள்ளலாம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.