காற்று மாசு, சுகாதாரத்துக்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதை அறிவோம். காற்று மாசுபாடு காரணமாக உலக அளவில் ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் அகால மரணம் அடைகின்றனர். படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து ஒன்றிய மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது. வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது.
அந்த நிலையில் டெல்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால் காற்று மாசுபாடு மோசமான நிலையை எட்டி வருகிறது. 450ஆக காற்று மாசின் அளவு பதிவாகியுள்ளது. இதனால் டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசநோய் தொடர்பான உபாதை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் மாசு நிலை சீராகும் வரை டெல்லியில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லியில் காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதற்காக டெல்லியில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்படுகிறது. 5-ம் வகுப்புக்கு மேல் உள்ள அனைத்து வகுப்புகளின் விளையாட்டு உட்பட அனைத்து வெளிப்புற செயல்பாடுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்று மாசுபாடு வட இந்திய பிரச்சனை. ஆம் ஆத்மி, டெல்லி அரசு அல்லது பஞ்சாப் அரசு மட்டும் பொறுப்பல்ல என்று கூறியுள்ளார்.