செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மனைவி கிரிஜா 63). துபாயில் உறவினர்களுடன் வசித்து வந்தார். கிரிஜாவின் தங்கை ராதா (55), தம்பி ராம்குமார் (47), ராம்குமாரின் மனைவி பார்கவி (35), அவரின் மகள் ஆராதனா (6) ஆகியோர், கிரிஜாவின் கணவர் வெங்கட்ராமனுக்கு திதி கொடுக்க துபாயிலிருந்து கடந்த இரண்டாம் தேதி சென்னை ஊரப்பாக்கத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் முதல்மாடியில் அனைவரும் தங்கியிருந்தனர்.
நேற்றிரவு வழக்கம் போல அவர்கள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஃபிரிட்ஜ் (குளிர்சாதன பெட்டி) வெடித்து, அதிலிருந்து நச்சுப் புகை வெளியேறியது. அதனால் தூக்கத்திலிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கிரிஜா, அவரின் தங்கை ராதா, தம்பி ராம்குமார் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. பார்கவி, ஆராதனா ஆகியோர் மட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடுவாஞ்சேரி போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில், “இந்தச் சம்பவம் அதிகாலை நேரத்தில் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. விபத்துக்கு மின்கசிவு காரணமா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். சிகிச்சை பெற்றுவரும் பார்கவி, ஆராதனா ஆகியோரிடம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம்” என்றனர்.
ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.