நேற்றிரவு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர், “திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் 2பேர், திருப்பூர் படியூர் முருகன் கோவில், மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார்.
இதனையடுத்து திருப்பூர் மாநகர போலீசார் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபர், திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47) என்பதை கண்டறிந்து அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
ஆனால், அவர் 2019ம் ஆண்டு விபத்தில் சிக்கி தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இருந்த போதிலும், அவர் கேட்டது உண்மையா? இல்லையா என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒருப்படியாக சம்மந்தப்பட்ட டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.