காஞ்சிபுர விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு லட்ச மரக்கன்றுகள் வழங்க வேளாண்துறை இலக்கு வைத்துள்ளது.
காஞ்சிபுரத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது. இதில் விவசாயிகள் அதிகமாக நெல் மற்றும் காய்கறிகளையே பயிரிடுகின்றனர். இந்த விவசாயிகளை மாற்றுப்பயிர்கள் பயிரிட ஊக்குவிப்பதற்கு, விதை, உரங்கள், தார்பாய், வேளாண் கருவிகள் ஆகியவற்றை அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது. மேலும் இவர்களுக்கு செயல்விளக்க பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றது.
பசுமை போர்வைக்கான இயக்கம் மூலம், ஒரு லட்சம் வரப்பு மரப்பயிர்கள் மற்றும் முழு நில மரப்பயிர்களை காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை வழங்க உள்ளது. உதாரணமாக, 2.47 ஏக்கர் நிலத்திற்கு 120 வரப்பு மரப்பயிர் கன்றுகளும், 1,000 முழு நில மரப்பயிர்கன்றுகளும் வழங்க உள்ளது. மரப்பயிர் சாகுபடி மூலம் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்ட முடியும்.
மரக்கன்றுகளை பெற விரும்பும் விவசாயிகள், ஆதார் எண் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.
இதுக்குறித்து காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முனைவர் இளங்கோவன் கூறியதாவது, “காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருமனம் தரும் மர சாகுபடி செய்வதற்கு, விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. மேலும் செடிகள் கொள்முதல் செய்வதற்கு, அடுத்த வாரம் டெண்டர் விட உள்ளோம்” என்று கூறினார்.
இந்த திட்டத்தில் தேக்கு, சந்தனம், மகோகனி, குமிழ், செம்மரம், பூவரசு, நெல்லி, நாவல், புளி ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.