சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் கழன்றது: டிரைவரின் சாமர்த்தியதால் பயணிகள் தப்பினர்

திருவள்ளூர்: சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்பு துண்டானது. ஆனால் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரிய உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். இந்த ரயில், திருவள்ளூர் அருகே நள்ளிரவு 11 மணி அளவில் வந்தபோது எஸ் 7, எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளில் பயங்கர சத்தம் ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது மேடையில் ரயில் சென்றபோது  திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி துண்டிக்கப்பட்டு பலத்த சத்தத்துடன் தனியாக ஓடியது. இதையடுத்து டிரைவர் திறமையாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இதனால் பயணிகள் அனைவரும் தப்பினர். பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்ட பெட்டிகளின் இணைத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். சென்னை பெரம்பூர் கேரேஜ்-ல் இருந்து இணைப்பு கொக்கிகள் கொண்டுவரப்பட்டு ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டது. இதன்பிறகு சுமார் 3 மணி நேரத்திற்கு பின் அரக்கோணம் மார்க்கமாக ரயில் கோவைக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.