வாரணாசி உத்தர பிரதேசத்தில், மதரசாக்களில் பயிலும் மாணவ – மாணவியருக்கு அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான பாடங்களும் கற்பிக்கப்பட உள்ளதாக, மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரசேதத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஆய்வுக் கூட்டம் நடத்திய மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் தரம்பால் சிங் கூறியதாவது:
பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டத்தின் கீழ், உ.பி.,யில் இஸ்லாமிய மத கல்வி கற்றுத் தரும் மதரசாக்களில் பயிலும் மாணவ – மாணவியருக்கு அறிவியல், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களும் கற்றுத் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக இந்த மாணவர்களிடம் மத நுால்களும் இருக்கும்; ‘லேப் டாப்’பும் இருக்கும். இதுபோன்ற பாடங்களை கற்கும் மாணவர்கள், மவுலவி ஆவதற்கு பதிலாக, அரசு அதிகாரிகளாக பணியாற்ற முடியும்.
வக்பு வாரியத்துக்குச் சொந்தமான காலியான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை காலி செய்துவிட்டு அந்த இடங்களில் பள்ளி, மருத்துவமனைகள், பூங்காக்கள் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement