`மது அருந்துங்கள், குட்கா உட்கொள்ளுங்கள், ஆனால், தண்ணீரை மட்டும்..!' – பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா. பாஜக-வைச் சேர்ந்த இவர், நீர் பராமரிப்பு பற்றி ஒரு விநோதமான கருத்தைக் கூறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி  பேசுபொருளாகியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (6-11-22) ரேவாவில் கிருஷண்ராஜ் கபூர் அரங்கில் நடந்த ஒரு நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் ரேவா தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜனார்தன் மிஸ்ரா பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் நீர் பராமரிப்பு பற்றிப் பேசினார். அப்போது, “நிலங்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. அவற்றைக் காப்பாற்ற வேண்டும். நீங்கள் குட்கா உட்கொள்ளுங்கள், மது அருந்துங்கள், அல்லது சுலிசன் எனும் ரசாயனத்தையோ, ஐயோடெக்சையோ உட்கொள்ளுங்கள்.

ஆனால் தண்ணீரின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார். மேலும், “எந்த அரசு உங்களிடம் நீருக்கான வரியை விலக்குவதாகச் சொன்னாலும்,  நீருக்கான வரியை நாங்கள் செலுத்துகிறோம் எனக் கூறுங்கள். ஆனால் மின் கட்டணம் உட்பட மற்ற வரிகளுக்கு விலக்கு கேளுங்கள்” என்றும் பேசியிருக்கிறார். 

ஜனார்தன் மிஸ்ரா தொடர்ச்சியாக சர்ச்சையான முறையில் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாக அவர் ஒரு கழிவறையை தன் கைகளால் சுத்தம் செய்வது போன்ற காணொளி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.