புதுடில்லி, ‘கல்வி, லாபம் சம்பாதிப்பதற்கான வியாபாரமல்ல’ என கூறி, மருத்துவக் கல்லுாரி கல்வி கட்டணத்தை உயர்த்திய ஆந்திர மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மருத்துவக் கல்லுாரிகளில் கல்வி கட்டணத்தை ஆண்டுக்கு ௨௪ லட்சம் ரூபாயாக உயர்த்தி, அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, நாராயணா மருத்துவக் கல்லுாரி மற்றும் அம்மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சுதான்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ஆண்டுக்கு ௨௪ லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே உள்ள கட்டணத்தைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம்; இது நியாயமற்றது.
கல்வி என்பது லாபம் சம்பாதிப்பதற்கான வியாபாரம் அல்ல. கல்வி கட்டணமானது எப்போதும் ஏற்கத்தக்கதாக இருக்க வேண்டும். கல்வி கட்டணம் நிர்ணயம் தொடர்பான விதிமுறைகளுக்கு முரணாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. ஆந்திர மாநில அரசு மற்றும் கல்லுாரி நிர்வாகத்துக்கு தலா, ௫ லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை, ஆறு வார காலத்துக்குள் நீதிமன்றத்தின் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement