ஐரோப்பிய யாத்திரையில் பிரணவ் மோகன்லால்

மலையாள திரையுலகில் பஹத் பாசில், துல்கர் சல்மான், வினீத் சீனிவாசன் ஆகியோரை தொடர்ந்து வாரிசு நடிகராக அறிமுகமானவர் மோகன்லாலின் மகன் பிரணவ். இயக்குனராகும் ஆசையில் பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், ஒருகட்டத்தில் திசைமாறி, கதாநாயகனாக நுழைந்து படங்களில் நடித்து வருகிறார். இதுவரை மூன்று படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹிருதயம் படத்தின் மூலம் இரண்டாவது வெற்றியை ருசித்தார்.

அதேசமயம் துல்கர் சல்மான், பஹத் பாசில் ஆகியோர் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து படங்களிலாவது நடித்து தங்களை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இவரோ ஹிட் படம் கொடுத்தாலும் கூட அடுத்த படத்தில் நடிப்பது குறித்து எந்த யோசனையும் இல்லாமல் ஜாலியாக யாத்திரை கிளம்பி விடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவ்வளவு ஏன் இவரது முதல் படமான ஆதி ரிலீசான தேதியில், இவரோ இமயமலைப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்தநிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளில் இவர் யாத்திரை மேற்கொண்டு இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் இயக்குனர் வினித் சீனிவாசன். அதுமட்டுமல்ல ஐரோப்பாவில் உள்ள இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள 800 கிலோ மீட்டர் தூரத்தை இவர் நடந்தே பயணித்து கடந்ததாகவும் ஒரு ஆச்சரிய தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார் அந்தவகையில் இளம் ஹீரோக்களில் பிரணவ் மோகன்லால் சற்றே வித்தியாசமானவர் என்று தான் தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.