கடைசி 2 அடி தான் முக்கியம்… கனமழையும், நீர்நிலைகளும்- சென்னையில் அதிரடி உத்தரவு!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று (நவம்பர் 11) காலை முதல் நல்ல மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் நீர்நிலைகளை தொடர்ச்சியாக கண்காணிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் நீர்நிலைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னையில்
கனமழை
பெய்து வருவதால் நீர்நிலைகளில் அதிகபட்ச அளவில் இருந்து 2 முதல் 3 அடி வரை குறைத்து வைக்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் கூறுகையில், மழை காலங்களில் கூட நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. தேவையற்ற கழிவுகள் கடலுக்கு செல்லாமல் தடுக்க வலைகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிக மழை பெய்யும் போது சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து மழைநீர் வடிகால்களில் இருந்து வரும் நீரை கடல் உள்வாங்குவதில் தாமதமான சூழல் உண்டாகிறது. இது சாலைகளில் நீர் தேங்கும் நிலைக்கு தள்ளிவிடுகிறது. இதனால் ஏரி, குளங்களில் உள்ள நீரின் அளவை முழு கொள்ளளவில் இருக்காமல் பார்த்து வருகிறோம்.

2 முதல் 3 அடி வரை நீர் மட்டத்தை குறைத்து கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு செய்வதால் ஒரே நேரத்தில் 10 செ.மீ அளவிற்கு மழை பெய்தாலும் நீர் தேங்குவதில்லை. நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து தொடர் கனமழை பெய்யும் போது நீர் இருப்பை குறைத்து கொள்ள அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்து வருகிறார். மேலும் ரிப்பன் மாளிகையில் உள்ள பேரிடர் கால அவசர கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தில் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார். அப்போது பேசுகையில், சென்னையில் இன்று காலை வரை சராசரியாக 64.5 மி.மீ மழை பெய்துள்ளது.

தேவைப்படும் இடங்களுக்கு மோட்டார்கள் அனுப்பப்படும். மாநகராட்சி மேற்கொண்ட நடவடிக்கைகளால் தற்போது 16 சுரங்க பாதைகளில் மழைத் தண்ணீர் தேங்குவது தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறினார். தற்போது புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 100 கன அடியில் இருந்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.