சமீபத்தில் மதுரையில் மகளிர் கல்லூரியில் மாணவிகளிடம் இளைஞர்கள் சிலர் மது போதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
அந்த வீடியோவில் அவர்கள் மாணவிகளை அச்சுறுத்தும் வகையிலான செயல்களையும் செய்தனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு மகளிர் அமைப்பினரும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்ட போது தகராறில் ஈடுபட்ட 10 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து மாணவிகளின் பாதுகாப்பு கருதி மகளிர் காவலர்களை கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் அனைத்து மகளிர் கல்லூரிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவலர்களை நிறுத்தலாம் என்று தமிழக அரசுக்கு யோசனை வழங்கியுள்ளது.