நடிகர் ஆர்.கே. வீட்டில் 200 சவரன் நகை கொள்ளை விவகாரம்; கொள்ளையர்களின் புகைப்படம் வெளியீடு!

சென்னையில் நடிகரின் மனைவியை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளைடிக்கப்பட்ட விவகாரத்தில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களின் படம் வெளியாகியுள்ளது.

சென்னை நந்தம்பாக்கம், டிபன்ஸ் ஆபிசர்ஸ் காலனி, 12-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ‘எல்லாம் அவன் செயல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்.கே. என்கிற ராதாகிருஷ்ணன் (60). இவரது மனைவி ராஜீ (51), நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் அவரது கை, கால்களை கட்டிப்போட்டு, வாயை டேப் வைத்து அடைத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டி, பின்னர் சாவியை வாங்கி வீட்டில் இருந்த 200 சவரன் தங்க நகை, 2 லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

தகவலறிந்து சென்ற நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சி.சிடி.வி. காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது நேபாளிகள் எனக் கண்டுபிடித்தனர். மேலும் பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

image

இந்நிலையில் கொள்ளையர்களின் முகம் சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்தப் படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. வீட்டில் வேலை செய்து வந்த ரமேஷ் (38) என்பரும், கொள்ளை சம்பவம் நடைபெற்றது முதல் அங்கே இல்லாமல் இருப்பதால், அவர் தான் திட்டமிட்டு இந்த இருவர் மூலமாக கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர்.

அதன் காரணமாக ரமேஷின் மைத்துனர் கணேஷ் ராகையா என்பவரை போலீசார், காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கணேஷ் ராகையா, ரமேஷிடம் பேச்சுவார்த்தை இல்லை எனக் கூறியுள்ளார். இருப்பினும் அவர் பெங்களூரு சென்றிருக்கலாம் என கணேஷ் ராகையா கொடுத்த தகவலின் பேரில் அங்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.