வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்

சென்னை மற்றும் அதன் ஒட்டிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை கொட்டி வருகிறது. அந்தப் பகுதிகள் மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள், வடமாவட்டங்கள் என பெரும்பாலான பகுதிகளில் மழை  பெய்துவருகிறது. இதன் காரணமாக 20க்கு மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரி, குளங்களும் நிரம்பிவருகின்றன. சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்லது.

இந்தச் சூழலில் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியிருக்கிறது. அதாவது தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி நகருமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது குறைந்த காற்றழுத்த பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்திருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து  நகர்ந்து 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதிவாக்கில் தமிழ்நாடு, புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும், கரையை கடந்த பிறகு அரபிக்கடல் நோக்கி  நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் வரும் 14ஆம் தேதிவரை மழை இருக்குமென்று கூறப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே நிர்வாக காரணங்களுக்காக தமிழ்நாட்டுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடனும், தேவையின்றி வெளியில் செல்லாமல் பாதுகாப்புடனும் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.