பதஞ்சலி நிறுவனத்தின் 5 மருந்து பொருட்களுக்கு தடை விதித்து உத்தரகண்ட் மாநில ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் திவ்யா பார்மசியின் மதுக்ரிட், ஐக்ரிட், தைரோகிரிட், பிபிகிரிட் மற்றும் லிப்பிடோம் ஆகிய 5 மருந்துகளின் உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த 5 மருந்துகளும் ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, குளுக்கோமா எனும் கண் நோய், அதிக கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்காக பயன்பாட்டில் உள்ளது. பதஞ்சலி நிறுவனம் தவறான விளம்பரங்களை விளம்பரப்படுத்தியதால் இந்த 5 மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி சர்வீசஸ் உரிம அதிகாரி டாக்டர் ஜி.சி.எஸ். ஜங்பாங்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், இந்த மருந்துகளின் தயாரிப்பை மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கும்வரை, 5 மருந்துகளின் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தவறான வழியிலான/ ஆட்சேபனைக்குரிய இந்த மருந்து குறித்த விளம்பரங்களை உடனடியாக ஊடகங்களில் இருந்து நீக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.