புதுடெல்லி: 2024 மக்களவை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (நவ.14) கூடவிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் குழு கூடுகிறது.
கார்கே தலைமைப் பதவியை ஏற்றபின்னர் இந்தக் கூட்டம் முதன்முறையாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் உத்தி குழுவின் உறுப்பினர்கள் தலைவர் கார்கேவிடம் செயற் குழுவின் பணிகள் மற்றும் 2024 தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கும்.
இந்த செயற்குழுவில் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கேசி வேணுகோபால், அஜய் மாக்கென், ரன்தீப் சூரஜ்வாலா, பிரியங்கா காந்தி வத்ரா, சுனில் கனுகோலு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியே காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. அதேபோல் அந்தக் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிகாரமிக்க செயற் குழு ஒன்றை அறிவித்தது. அதன்படி அந்தக் குழு தனது முதல் கூட்டத்தை நாளை மறுநாள் நடத்தவிருக்கிறது.