80'ஸ் ரீயூனியன்: ஒன்றுக்கூடிய நடிகர், நடிகைகள்

1980களில் திரையுலகில் தடம் பதித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வருகின்றனர். '80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10வது ஆண்டு கொண்டாட்டத்தை 2019ல் சிரஞ்சீவி தனது ஹைதராபாத் இல்லத்தில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக அந்த நிகழ்ச்சி இடம்பெற்றது. அடுத்த வருட நிகழ்ச்சிக்கு அனைவரும் காத்திருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் '80ஸ் ரீயூனியன்' நடைபெறவில்லை. இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அனைவரும் சந்தித்தனர்.

நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராப் ஆகியோர் நான்கு தென் மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்களுக்கு விருந்தளித்து உபசரித்தனர். பாலிவுட்டை சேர்ந்த தங்கள் நண்பர்கள் சிலரையும் அழைத்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் சில குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும் ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர், சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். இதில் நடிகர் மாதவன் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தியதோடு துபாய் விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால் விரைவில் விடை பெற்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.