2022 ஆம் ஆண்டுக்கான கூகுள் டூடுல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான விருதை கொல்கத்தாவைச் சேர்ந்த ஸ்லோக் முகர்ஜி வென்றுள்ளார். அவரது டூடுல் கூகுள் பக்கத்தில் இன்று வெளியாகியுள்ளது. அதற்கு இந்தியா ஆண் சென்டர் ஸ்டேஜ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தனது டூடுல் குறீத்து ஸ்லோக் முகர்ஜி அடுத்து 25 ஆண்டுகளில் இந்தியாவில் நிறைய விஞ்ஞானிகள் இருப்பார்கள். மனிதர்களின் மேம்பாட்டிற்காக சூழல் நட்பு ரோபோக்களை அவர்கள் உருவாக்குவார்கள். இந்தியாவில் இன்டர் கேலக்டிக் போக்குவரத்து நடைபெறும். அதாவது பூமிக்கும் விண்ணுக்கும் போக்குவரத்து நடக்கும். இந்தியாவில் யோகாவும், ஆயுர்வேதமும் முக்கியத்துவம் பெறும் என்று கூறியிருந்தார்.
இந்த ஆண்டு இந்தியா முழுவதும் 100 நகரங்களில் இருந்து 1,15,000 விண்ணப்பங்கள் வந்திருந்தன. 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனுப்பியிருந்தனர். இதற்கான கரு, ‘அடுத்த 25 ஆண்டுகளில் எனது இந்தியா எப்படியிருக்குமென்றால்’ என்பதே ஆகும்.
நடுவர் குழுவில் திரைப்பாட தயாரிப்பாளர் நீனா குப்தா, டிங்கிள் காமிக்ஸ் ஆசிரியர் குரியகோஸ் வய்ஸியன், யூடியூப் க்ரியேட்டர், தொழில் முனைவோர் அலிகா பாட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நடுவர்கள் குழு சிறுவர்களின் படைப்பாற்றல் வியக்கவைப்பதாகக் கூறினர்.
அதிலிருந்து 20 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றனர். அவர்களது படைப்புகள் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் ஸ்லோக் முகர்ஜியின் படம் வெற்றி பெற்றது. இவருடன் 4 பேரும் க்ரூப் வின்னர்களாக தேர்வாகினர். ஆண்டுதோறும் இந்த கூகுள் டூடுல் போட்டியானது இளம் குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் சிறுவர்களின் கற்பனை சக்தியை ஊக்குவிக்கவும் நடத்தப்படுகிறது.