ஒன் பை டூ: தேர்தல் பத்திர திட்டத்தை ஆதரிக்கும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்து?

ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர், சி.பி.எம்

“ஆட்சி அதிகாரம் கொடுத்த ஆணவத்தின் உச்சத்தில் சொல்லப்பட்ட கருத்து இது. அடிப்படையில் ‘ஒரு கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய வாக்காளர், அந்தக் கட்சிக்கு எங்கிருந்து, யாரிடமிருந்து, எவ்வளவு பணம் வந்தது என்பதைக்கூடத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, தேர்தல் பத்திரத் திட்டம் அரசியலமைப்புக்கு முரணானது’ என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது. ஆனால், பா.ஜ.க-வைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதுமே, எந்தச் சட்டத்தையுமே மதிப்பது கிடையாது. அதனால்தான், பிரதமர் மோடியே, ‘தேர்தல் பத்திரத் திட்டம் என்னுடைய கனவுத் திட்டம்’ என்று பேசுகிறார். ஆக, ஒரு நாட்டின் பிரதமரே இப்படிப் பேசும்போது, அவரது அரசில் இருக்கும் அமைச்சர்கள் சட்டத்தைப் புறந்தள்ளிப் பேசுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஒட்டுமொத்தத்தில், ‘தேர்தல் பத்திரத் திட்டம் தவறானது இல்லை’ என்று மக்களை மீண்டும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். ‘மீண்டும் பா.ஜ.க-தான் ஆட்சி அமைக்கும்’ என்று சொல்லி ஏற்கெனவே பெருமுதலாளிகளிடமிருந்து பல்லாயிரம் கோடியை கமிஷனாகவும், மிரட்டியும் தேர்தல் பத்திரமாகப் பெற்றதுபோல மீண்டும் செய்யலாம்’ என்று எத்தனிக்கிறார்கள். மக்கள் விழிப்படைந்துவிட்டார்கள்… பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை!”

ஜி.செல்வா, ஜி.கே.நாகராஜ்

ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க

“அமைச்சர் பேசியது நூறு சதவிகிதம் நியாயமானது. இந்தக் கருத்தைச் சொன்னவர் மத்திய நிதியமைச்சர், நிதிநிலையை மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்ட ஒருவர். முன்பெல்லாம், `தேர்தல் நிதி’ என்ற பெயரில், கறுப்புப் பணம் அளவில்லாமல் கை மாறும். இதையெல்லாம் தடுக்கும்விதமாக, ஓர் அரசியல் கட்சியே நேரடியாகத் தனது வங்கிக் கணக்குக்கு வெள்ளைப் பணத்தை வாங்கி, செலவு செய்கிறது. இது எப்படித் தவறானதாக இருக்கும்… தங்களுக்குப் பிடித்த, வளமான வளர்ச்சிப் பணிகளைச் செய்யும் அரசியல் கட்சிகளுக்குப் பிடித்தவர்கள் நன்கொடை கொடுக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில், வெளிப்படைத் தன்மையைக்கொண்ட திட்டம் இது. உச்ச நீதிமன்றம் சொன்ன ஒரு சில விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள பா.ஜ.க தயாராக இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகள் இந்தத் திட்டத்தை எதிர்த்துவிட்டு, பின்னர் இதே திட்டத்தின்கீழ் நிதி வாங்கியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லும் செயலும் வேறு வேறாக இருப்பவர்களுக்கு மத்தியில், நாங்கள் சொன்னதில் உறுதியாக இருப்பது தவறா… எனவே, ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தை நிராகரிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவை இருக்கிறது!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.