சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவு!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வு குழு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று நடைபயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை செய்தும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்படாததால் மாநில போலீசாரே வழக்கை விசாரிக்க உத்தரவிடக் கோரி ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை நிலை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.