பள்ளி சீருடையில் திடீர் மாற்றம் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டை மற்றும் முழு கால் சட்டை அணியுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகள் அதிகளவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை அடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உத்தர பிரதேச மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்ட பள்ளி அலுவலர்களுக்கும் மாணவர்களை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இடைநிலைக் கல்வித் துறை வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. டெங்கு காய்ச்சலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க பள்ளிகள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என இடைநிலைக் கல்வி இயக்குனர் மகேந்திர தேவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

மாணவர்களை முழுக்கை சட்டை மற்றும் முழு கால் சட்டையுடன் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்த வேண்டும். தினசரி பிரார்த்தனை கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து குழந்தைகளுக்கு கட்டாயமாக தெரிவிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பேரணிகள் நடத்த வேண்டும். வளாகத்தில் உள்ள திறந்தவெளி நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் ஆகியவை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புதர்களை வெட்ட வேண்டும். எந்த குழந்தைக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.