மணிரத்தினம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த செப்டம்பர்-30ம் தேதியன்று வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் வேட்டை நடத்தியது. இப்படத்தின் முதல் பாகத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர், அஷ்வின், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என பெரியளவில் நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் வைப் செய்யப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்திற்கும் மேலாக பல திரையரங்குகளிலும் ஒவ்வொரு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல்லாகவே இருந்தது, இப்படம் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ‘பொன்னியின் செல்வன்‘ படத்தின் இரண்டாம் பாகம் உலகெங்கிலும் 2023ம் ஆண்டு ஏப்ரல்-28ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று இயக்குனர் மணிரத்னம் தெரிவித்திருந்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது இரண்டாம் பாகத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வன்-2 படத்தின் சில காட்சிகளை மீண்டும் படமாக்க இயக்க மணிரத்தினம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மீண்டும் இயக்கவிருக்கும் சில முக்கியமான காட்சிகள் 7 முதல் 10 நாட்கள் வரையில் படப்பிடிப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
‘பொன்னியின் செல்வன்-2’ படத்திற்கான ப்ரொடக்ஷன் பணிகள் அக்டோபர் மாதத்திலிருந்து தொடங்கப்பட்டுவிட்டது, தற்போது எடிட்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது, இந்நிலையில் இயக்குனர் படத்தின் சில முக்கியமான காட்சிகளை மட்டும் மீண்டும் உருவாக்க எண்ணியுள்ளார். இருப்பினும் மீண்டும் படமாக்கப்போவது குறித்த அதிகாரபூர்வ தகவல்களை இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம் அடுத்ததாக கமல்ஹாசனை வைத்து இயக்க உள்ளார்.