விடுதலையாகியும் விடாத துயரம்: நான்கு சுவர்களுக்குள் மீண்டும் போராட்டம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய எழுவர் கைது செய்யப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வந்தனர். இதனிடையே, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரை கடந்த மே மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்காட்டி, சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

தொடர்ந்து, நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் இருவரும் அவர்களது வீடுகளுக்கு சென்று விட்டனர். முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், சாந்தன் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த நிலையில், தங்களை மற்ற அகதிகள் போல் நடத்த வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, சிறப்பு அகதிகள் முகாமில், 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாது, ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் அனைவரையும் இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், தமிழ்நாட்டிலேயே அவர்களது வாழ்வாதாரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஒரு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், சிறப்பு அகதிகள் முகாமில் அவர்கள் அடைக்கப்பட்டதற்கும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்திய சட்டத்தின்படி, வெளிநாட்டவர் இங்கு இருந்தால் அகதியாகவோ அல்லது வெளிநாட்டவர் சட்டம் பிரிவு 12ன் படி மத்திய அரசால் வழக்கப்பட்ட விசா அனுமதியோடு தான் இருக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.