நவம்பர் 16-ம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதன் காரணமாக வடகிழக்குப் பருவமழையின் மூன்றாம் சுற்று மழை வரும் 20-ம் தேதிக்குப் பிறகு பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம், “வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது புயலாக மாறுமா என்பதைப் புயல் கண்காணிப்பு மையம் தொடர்ந்து கண்காணிக்கும். வரும் 19-ம் தேதிவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16.11.2022 அன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். அது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18-ம் தேதி வலுப்பெறும். எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்” எனத் தெரிவித்திருக்கிறது.